2007ஆம் ஆண்டு சென்னை ஒரகடத்தில் வங்கிக் கடன் மூலம் ஒரு நிலம் வாங்கினேன். பல மாதங்களாகப் பூட்டிக் கிடந்ததால், அங்கு முழங்கால் உயரத்திற்குப் புற்களும் புதர்களுமாக மண்டிக் கிடந்தன. அவற்றை அகற்றினால்தான் அங்கு எந்தக் கட்டுமானப் பணியையும் செய்ய முடியும் என்ற நிலை. அவற்றை அகற்றுவதற்காகக் கூலி ஆட்களிடம் பேசினேன். இரண்டாயிரம் ரூபாய் வேண்டும் என்று கேட்டார்கள். இந்த வேலைக்கு இந்தத் தொகை அதிகம் என்பது என் எண்ணம்.
ஆகவே என்ன செய்யலாம் என்று சிந்தித்த போது, அந்த நிலத்திற்கு 'ரஃப் யூஸ்' எனப்படும் கட்டட இடிபாடுகளைத் தன் மாட்டு வண்டியில் கொண்டு வந்து கொட்ட வந்த மன்னார் ஒரு வழி சொன்னார்.
அதாவது நிலத்தினைச் சில நாள்கள் பூட்டாமல் திறந்து வைத்தால் அண்டை அயலில் உள்ள மாடுகள் உள்ளே நுழைந்து புற்களை மேய்ந்து விடும் என்றார். நல்ல யோசனையாகப் பட்டது. நமக்கும் செலவு மிச்சம்; மாட்டுக்கும் உணவு என இரட்டைப் பயன் இருக்கிறதே என்ற எண்ணத்தில் நிலத்தினைத் திறந்து வைத்தேன்.
பக்கத்தில் எனக்குத் தெரிந்த மாடு வளர்ப்பவர்களிடமும் சொன்னேன். அவர்கள், தங்கள் மாடுகளைத் தினமும் மேய்ச்சலுக்கு அவிழ்த்து விட்டு, மாலையில் பிடித்துக் கட்டுவது வழக்கம். உங்கள் மாடுகளைச் சில நாள்கள் இந்த நிலத்தில் விடுங்கள்; இதனால் உங்களுக்கு நன்மை என்றேன். அப்போது சரி என்றவர், அங்கு பூச்சி பொட்டுகள் இருக்கும் என எண்ணி, தன் மாடுகளை அங்கு ஓட்டி விடவில்லை.
ஒன்றிரண்டு மாடுகள் மட்டுமே மேய்ந்தன. அவையும் முழுமையாக மேயவில்லை. கடைசியில் ரூ. 350 செலவில் இரண்டு ஆட்கள் ஒரே நாளில் அந்த நிலத்தை ஓரளவு சீர் செய்தார்கள்.
எனது இந்த முயற்சி பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் மன்னார் சொன்ன யோசனை, நல்ல பயன் உடையதுதான். நாளை உங்களுள் யாருக்காவது இப்படியொரு தேவை ஏற்பட்டால் மாடுகளை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
Sunday, July 27, 2008
மன்னார் சொன்ன யோசனை
Posted by
முனைவர் அண்ணாகண்ணன்
at
12:18 AM
4
comments
Saturday, June 16, 2007
மதுரையில் 2 நல்ல திட்டங்கள்
கானல் காட்டுக்குப் போய்விட்டு, பட்டிவீரன்பட்டி வழியாக 7.10.2007 அன்று மதுரை ரெயில் நிலையம் வந்தேன். அங்கு ரெயில் வருவதற்கு 2 மணி நேரம் இருந்தது. சரி, மதுரையை ஒரு சிறு வலம் வருவோம் எனக் கிளம்பினேன். வழியில் சில நல்லவற்றைக் கண்டேன்.
மதுரையின் தெருக்களில் நல்ல வழிகாட்டிப் பலகைகளைக் கண்டேன். ஒவ்வொரு தெருவின் அமைப்பு, மதுரை மாநகராட்சியின் முக்கிய தொலைபேசி எண்கள், கவுன்சிலரின் பெயர் - தொடர்பு எண்கள் ஆகியவற்றோடு அந்தப் பலகையை வைக்க உதவிய விளம்பரதாரரின் விவரத்துடன் அந்தப் பலகைகள் விளங்கின. தெருப் பெயர்கள் மட்டும் ஆங்கிலத்தில் இருந்தன. அவற்றையும் தமிழாக்கினால் மிக நல்லது. இதே போல் தமிழ்நாட்டின் எல்லாத் தெருக்களுக்கும் வைக்கலாம்.
சென்னையிலும் இன்னும் சில பெரிய நகரங்களிலும் இத்தகைய பலகைகள் இருக்கின்றன ஆயினும் அவை மிகக் குறைவே. மேலும் பல இடங்களில் தன்னார்வலர்களின் முயற்சியினால்தான் இத்தகைய பலகைகள் நிற்கின்றன்; நகர நிர்வாகம், விளம்பரதாரர்களை உரிய வகையில் பயன்படுத்தினால் இதை வீச்சுடன் பயன்படுத்தலாம். இதையே எணினி (டிஜிட்டல்) வடிவில் வைத்து, கணினி வழி நிருவகித்தால் நீண்ட காலப் பயன் கிட்டும்.
பலகைகள், இரவில் ஒளிரும்வண்ணம் செய்யலாம். அதற்குத் தேவையான மின்சாரத்தைச் சூரிய ஒளியின் மூலம் தனக்குத் தானே அந்தப் பலகை பெறுமாறு செய்தால் மிக நன்று. அப்போது ஒரே பலகையில் ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட எந்த மொழியிலும் விவரங்களைப் பெற முடியும்.
அதே போன்று, தெருவோரம் வாகன நிறுத்துமிடத்தின் எல்லையை, சென்னை உள்பட பல பகுதிகளிலும் வண்ணத்தினால் (பெயின்ட்) வரைந்து வைத்துள்ளனர். அவை எளிதில் அழிந்தும் தேய்ந்தும் போய்விடுவதைக் காண்கிறோம். இதற்கு ஒரு சிறந்த தீர்வாக, மதுரை மாநகராட்சியினர், இரும்புக் கம்பிகளைப் பயன்படுத்தியுள்ளனர். இதனால் எல்லைக் கோட்டின் ஆயுள் பல மடங்கு கூடுகிறது. இதையும் இதர பகுதிகளில் பின்பற்றலாம்.
Posted by
முனைவர் அண்ணாகண்ணன்
at
8:21 AM
0
comments
Tuesday, May 15, 2007
அறிவே ஆயுதம்
குரங்கிலிருந்து மனிதனாக வளர்ச்சி அடைந்த காலக்கட்டம், மிகச் சுவையானது. ஒவ்வொன்றிலும் பட்டுப் பட்டுத்தான் மனிதன் கற்றுக்கொண்டான். அந்த அனுபவங்கள்தான் அவனது இன்றைய வளர்ச்சிக்கும் சிந்தனைக்கும் மறைமுகக் காரணங்கள்.
அந்த வகையில் நம் தற்போதைய அனுபவங்கள், நம்மோடு போய்விடக் கூடாது. அவை இன்றுள்ளவர்களுக்கும் எதிர்வரும் தலைமுறைகளுக்கும் பயன்பட வேண்டும். அந்த வகையில் பயனுள்ள அனுபவங்கள், திட்டங்கள், புதிய யோசனைகள், சிந்தனைகள் பலவற்றையும் தொகுக்கும் ஒரு முயற்சியே இந்த வலைப் பதிவு.
வரலாற்றிலிருந்தும் புத்தகங்களிலிருந்தும் திரைப்படங்களிலிருந்தும் நம் சம கால மனிதர்களிடமிருந்தும் நம் சொந்த எண்ணங்களிலிருந்தும் சூரியனுக்குக் கீழுள்ள அனைத்திடமிருந்தும் நாம் பெற்ற, பெறும் நல்ல யோசனைகளை இங்கு தொகுத்து வைப்போம்.
சவால்களும் சோதனைகளும் நேரும்போது அவற்றை எப்படி எதிர்கொள்வது என்பதை இவை நமக்கு எடுத்துரைக்கும். தவறுகளிலிருந்து பாடங்கள் கற்றவர்களும் கற்காதவர்களும் அதனைப் பகிர்ந்துகொண்டால், இதர மனிதர்களுக்கு அது ஒரு சிறந்த பாடமாக இருக்கும்.
இதனை ஒரு கூட்டு வலைப் பதிவாகவும் கொண்டு செல்லலாம். விருப்பமுள்ள நண்பர்கள், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.
Posted by
முனைவர் அண்ணாகண்ணன்
at
11:37 AM
0
comments